» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி கிராம மக்கள் உண்ணாவிரதம்
வெள்ளி 15, அக்டோபர் 2021 10:04:07 PM (IST)
சங்கரன்கோவில் அருகே மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி கிராம மக்கள் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தினர். தீக்குளிப்பேன் என வேட்பாளர் அறிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ளது கோ. மருதப்பபுரம் பஞ்சாயத்து. இந்த பஞ்சாயத்தில் நடைபெற்ற தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக கூறியும், மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரியும் உண்ணாவிரதம் நடைபெற்றது. உண்ணாவிரதத்திற்கு பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்ட விஜயலட்சுமி தலைமை வகித்தார். உண்ணாவிரதத்தில் முத்துகிருஷ்ணபுரம், சண்முகநல்லூர் கிராமங்களை சேர்ந்த பொது மக்கள் கலந்து கொண்டனர்.
இது குறித்து விஜயலெட்சுமி கூறியதாவது:- மேலநீலிதநல்லூர் யூனியன் கோ.மருதப்பபுரம் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டேன். ஆட்டோ ரிக்சா சின்னத்தில் போட்டியிட்ட எனக்கு 382 வாக்குகள் கிடைத்தது. ஏணி சின்னத்தில் போட்டியிட்டவருக்கு 369 வாக்குகள் கிடைத்தது. பூட்டு சாவி சின்னத்தில் போட்டியிட்டவருக்கு 356 வாக்குகள் கிடைத்தது. கை உருளை சின்னத்தில் போட்டியிட்டவருக்கு 190 வாக்குகள் கிடைத்தது.
ஆனால் மேலநீலிதநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலரும், கோ. மருதப்பபுரம் பஞ்சாயத்து எழுத்தரும் சேர்ந்து ஏணி சின்னத்தில் போட்டியிட்ட வீரம்மாள் என்பவரை வெற்றி பெற்றதாக அறிவித்து விட்டனர். எனவே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட வீரம்மாள் என்பவரை பதவி ஏற்க தடை செய்ய வேண்டும், மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும். இவ்வாறு செய்யாவிட்டால் தீக்குளிப்பேன் என்று கூறினார்.