» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடியில் என்கவுண்டரில் ரவுடி சுட்டுக்கொலை
வெள்ளி 15, அக்டோபர் 2021 3:55:07 PM (IST)
தூத்துக்குடியில் கொலை உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி எண்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி அருகேயுள்ள கூட்டாம்புளி திருமலையா புரத்தைச் சேர்ந்தவர் வெற்றிவேல் மகன் துரைமுருகன் (39). இவர் மீது 7 கொலை வழக்குகள் உட்பட 35க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த வாரம் நெல்லை மாவட்டம், பாவூர்சத்திரத்தில் நடந்த கொலை தொடர்பாக சப் இன்ஸ்பெக்டர் ராஜபிரபு தலைமையிலான தனிப்படை போலீசார் அவரை தேடி வந்தனர்.
இந்நிலையில், இன்று பிற்பகலில் முத்தையாபுரம் கோவளம் கடற்கரை பகுதியில் துரைமுருகன் பதுங்கியிருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் ராஜபிரபு, காவலர் டேவிட் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்குள்ள உப்பள ஷெட்டில் பதுங்கிய துரைமுருகனை போலீசார் வளைத்துள்ளனர். அப்போது துரைமுருகன் போலீசாரை அரிவாளாால் தாக்கிவிட்டு தப்பமுயன்றதால் சப் இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது.
இதில் கழுத்து, தலை உட்பட 3 இடங்களில் குண்டு பாய்ந்து துரைமுருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவ இடத்தை தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார், டவுண் டிஎஸ்பி கணேஷ், முத்தையாபுரம் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் மற்றும் போலீசார் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அவரது உடல் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் எதிரொலியாக பதற்றம், பரபரப்பு நிலவுவதால் தூத்துக்குடி, முத்தையாபுரம் மற்றும் திருமலையாபுரம் பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே ரவுடி துரைமுருகன் தாக்கியதில் காயம் அடைந்த காவலர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.