» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குமரியில் உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் தொடக்கம் : வாக்குச்சாவடி மையங்களை ஆட்சியர் ஆய்வு
வியாழன் 16, செப்டம்பர் 2021 12:20:10 PM (IST)
குமரி மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில் வாக்குச்சாவடி மையங்களை ஆட்சியர் மா.அரவிந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் காலியாக உள்ள முட்டம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியம் மகாராஜபுரம் 2-வது வார்டு, லீபுரம் 4-வது வார்டு, ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம் பறக்கை 8-வது வார்டு, குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியம் வெள்ளிச்சந்தை 3-வது வார்டு, தக்கலை ஊராட்சி ஒன்றியம் ஆத்திவிளை 3-வது வார்டு, திக்கணங்கோடு 6-வது வார்டு, திருவட்டாறு ஊராட்சி ஒன்றியம் குமரங்குடி 1-வது வார்டு, முஞ்சிறை ஊராட்சி ஒன்றியம் சூழால் 1-வது வார்டு, மேல்புறம் ஊராட்சி ஒன்றியம் வெள்ளாங்கோடு 5-வது வார்டு ஆகியவற்றின் வார்டு உறுப்பினருக்கான தற்செயல் தேர்தல் அடுத்த மாதம் 9-ம் தேதி நடைபெறவுள்ளது.
இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. முட்டம் ஊராட்சி தலைவர் பதவிக்கு குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு, அந்தந்த ஊராட்சி அலுவலகத்தில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும் முட்டம் ஊராட்சி தலைவர் தேர்தலுக்கான வாக்குச்சாவடி மையங்கள் அமைந்துள்ள கடியப்பட்டினம் புனித பீட்டர் நடுநிலை பள்ளி மற்றும் தூய இருதய உயர்நிலைப் பள்ளியை, மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் பார்வையிட்டார். வாக்கு எண்ணும் மையமான குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தையும் ஆய்வு செய்தார். ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) நாகராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் கேத்தரின் மெர்சி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.