» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நாகர்கோவிலில் டெங்கு காய்ச்சல் பரவுகிறது: சுகாதாரப் பணிகள் தீவிரம்
புதன் 15, செப்டம்பர் 2021 4:20:19 PM (IST)
நாகர்கோவில் நகர பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் சுகாதாரப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் தற்போது கரோனா இரண்டாவது அலை அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. இதன்காரணமாக நோய் தடுப்பு நடவடிக்கையில் சுகாதாரத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையங்கள், மார்க்கெட்டுகள் உள்ளிட்ட பகுதிகளில் சுகாதார பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். இந்நிலையில் நாகர்கோவில் நகர பகுதிகளில் தற்போது டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. கோட்டார் பகுதியை சேர்ந்த 2 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர்.
அவர்கள் இருவரும் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். டெங்கு காய்ச்சல் பரவி வருவதால் நாகர்கோவில் மாநகர பகுதிகளில் மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கொசு மருந்து தெளிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் கோட்டார் பகுதியில் வேறு யாருக்கும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என்பது குறித்து சுகாதார துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.