» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழா: இறைமக்கள் பங்கேற்பின்றி வழிபாடுகளை நடத்த முடிவு!

திங்கள் 2, ஆகஸ்ட் 2021 5:37:42 PM (IST)

தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத் திருவிழாவில் மக்கள் பங்கேற்பின்றியே வழிபாடுகளை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக  தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய பங்குத்தந்தை குமார்ராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: காவல் துறையின் ஆணைப்படி, இன்று (02.08.2021) காலை முதல் நமது பேராலயத்தில் வழிபாடுகள் மக்கள் பங்கேற்பின்றியே நடைபெற்றன. திருப்பயணமாக வந்த இஞ்ஞாசியார்புரம், திரு இதயங்களின் பேராலயம், ஸ்டேட் பாங்க் காலனி பங்குகளிலிருந்து தலா 100 பேர் அனுமதிக்கப்பட்டனர். வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையில் மக்களைப் பங்கேற்க வைப்பதில் காவல் துறைக்கு சிக்கல் இல்லை. 

ஆனால், எத்தனை பேரை அனுமதிப்பது, அவர்களை எப்படித் தேர்ந்தெடுப்பது என்பதில் நமக்குத்தான் சிக்கல். எனவே, நேற்றிரவு நடைபெற்ற பங்கு மேய்ப்புப் பணி செயற்குழுவின் அவசரக் கூட்டத்தில் யாரையும் அனுமதிக்காமல் மக்கள் பங்கேற்பின்றியே வழிபாடுகளை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, அடுத்த இரு நாள்களில் (ஆகஸ்ட் 3, 4) மக்கள் பங்கேற்பின்றியே திருப்பலிகளும், பிற்பகல் மறையுரை, அருளிக்க ஆசீர், மாலை நற்கருணை ஆசீரும் நடைபெறும். ஆனால், அருள்தந்தையர்களும், துறவியரும் அனைத்து நிகழ்வுகளிலும் பங்கு கொள்ளலாம். ஆகஸ்ட் 5 பெருவிழா எப்படிக் கொண்டாடப்படும் என்பது பற்றி பின்னர் தெரிவிக்கப்படும்.

"நடப்பவை அனைத்தும் இறைவனின் அனுமதியோடே நடைபெறுகின்றன”, "எல்லாம் நன்மைக்கே”, "என்ன நேர்ந்தாலும் நன்றி கூறுங்கள்” ஆகிய விவிலிய விழுமியங்களின் அடிப்படையில் இதனை நாம் சந்திக்க உங்களை அன்புடன் கோருகின்றேன். தற்போதைக்கு இறைமக்கள் இல்லங்களிலிருந்தே தொலைக்காட்சி வழியாக திருநிகழ்வுகளில் பங்கேற்கட்டும். அருள்பணியாளர்களும், துறவியரும் விரும்பும் நிகழ்வுகளில் பங்கேற்க வருக என அழைக்கின்றேன். கடந்த ஏழு நாள்களும் பெருவிழா சிறப்பாக நடைபெற்றதற்காக இறைவனுக்கு நன்றி கூறுகிறேன். நீங்கள் தந்த ஒத்துழைப்புக்கும் உதவிகளுக்கும் நன்றி கூறுகிறேன். நம் பனிமயத் தாய் நம்மைத் தொடர்ந்து வழி நடத்துவாராக!" இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

Common manAug 2, 2021 - 08:40:02 PM | Posted IP 108.1*****

அப்போ இவ்ளோ நாளும் மக்கள் பங்கேற்புடன் தான் நடந்ததா?

சாமான்யன்Aug 2, 2021 - 08:38:30 PM | Posted IP 108.1*****

அப்ப இவ்ளோ நாளும் பங்கேற்போடுதான் நடந்ததா?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory