» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

இந்து கடவுள்கள் பற்றி அவதூறாக பேசிய வழக்கில் பாதிரியார் ஜாமீன் மனு தள்ளுபடி!

சனி 31, ஜூலை 2021 12:08:57 PM (IST)

இந்து கடவுள்கள் பற்றி அவதூறாக பேசிய வழக்கில் கைதான பாதிரியார் ஜாமீன் மனு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.

குமரி மாவட்டம் அருமனையில் கிறிஸ்தவ இயக்கம் சார்பில் கடந்த 18-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா சர்ச்சைக்குரிய வகையில் சில கருத்துகளை கூறினார். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பா.ஜனதா எம்.எல்.ஏ. எம்.ஆர்.காந்தி ஆகியோரை விமர்சித்து அவதூறாக பேசியதோடு, இந்து கடவுள்கள் பற்றியும், தி.மு.க. வெற்றி பெற்றது குறித்தும் அவர் தெரிவித்த கருத்து பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.  

இதனை தொடர்ந்து அவதூறாக பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா உள்பட 3 பேர் மீது அருமனை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது, மத உணர்வுகளை புண்படுத்துதல், அவதூறு பரப்புதல், கொலை மிரட்டல், சட்ட விரோதமாக கூடுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. போலீசார் தேடுவதை அறிந்ததும் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா தலைமறைவானார்.

கடந்த 24-ம் தேதி வெளி மாவட்டத்திற்கு தப்பி செல்ல முயன்ற போது மதுரை மாவட்டம் கருப்பாயூரணி பகுதியில் வைத்து போலீசார் கைது செய்து குழித்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர் மாஜிஸ்திரேட்டு, பாதிரியாரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனால் அவர் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஸ்டீபனும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஜாமீன் மனு தள்ளுபடி

இந்த வழக்கில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஸ்டீபன் ஆகிய 2 பேர் சார்பிலும் ஜாமீன் கேட்டு குழித்துறை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை நேற்று வந்தது. அப்போது, ஒருங்கிணைப்பாளர் ஸ்டீபன் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த ஜாமீன் மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட், பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மற்றும் ஸ்டீபன் தரப்பு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory