» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
போலீஸ் தேடியதால் விஷம் குடித்த கள்ளக்காதல் ஜோடி: வாலிபரைத் தொடர்ந்து பெண்ணும் உயிரிழப்பு
செவ்வாய் 22, ஜூன் 2021 11:17:43 AM (IST)
சுசீந்திரம் அருகே போலீஸ் தேடியதால் கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து. இதில், கள்ளக் காதலனை தொடர்ந்து இளம்பெண்ணும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சுசீந்திரம் அருகே சங்கரன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் சுரேஷ்குமார் (25). இவர் தேரூர் பஞ்சாயத்தில் குப்பை அள்ளும் வண்டியில் டிரைவராக பணியாற்றி வந்தார். அங்கு தேரூரை சேர்ந்த சுபாஷ் மனைவி வித்யா (31) என்பவர் தூய்மை பணியாளராக பணியாற்றினார். வித்யாவுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்தநிலையில் வித்யாவுக்கும், சுரேஷ்குமாரும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது.
இதனை அறிந்த சுரேஷ்குமாரின் பெற்றோர், தன்னுடைய மகனுக்கு நெல்லை மாவட்டம் பாபநாசம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து வைத்தனர். அதன்பிறகும் சுரேஷ்குமார் வித்யாவுடன் தொடர்பில் இருந்தார். இந்தநிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கள்ளக்காதல் ஜோடி ஊரை விட்டு வெளியேறி நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள செட்டிகுளம் கிராமத்தில் குடியேறினர். அங்கு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர்.
இதற்கிடையே சுபாஷ், தனது மனைவி வித்யாவை காணவில்லை என்று சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது, செட்டிகுளம் பகுதியில் 2 பேரும் வசித்து வந்தது, போலீசாருக்கு தெரியவந்தது. அதே சமயத்தில் போலீசாரும் வரும் தகவல் கள்ளக்காதல் ஜோடிக்கு தெரிந்ததால், தங்களை பிரித்து விடுவார்களோ என அச்சம் அடைந்தனர்.
இதனால் கடந்த 13-ந் தேதி அன்று கள்ளக்காதலர்கள் இருவரும் விஷம் குடித்தனர். உயிருக்கு போராடிய அவர்களை போலீசார் உதவியுடன் பொதுமக்கள் மீட்டு நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சுரேஷ்குமார் இறந்தார்.வித்யாவுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்றுமுன்தினம் அவரும் பரிதாபமாக உயிரிழந்தார். கள்ளக்காதலனை தொடர்ந்து இளம்பெண்ணும் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.