» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
ஜக்கி வாசுதேவ் மீது நடவடிக்கையா? அமைச்சருக்கு இந்து முன்னணி கண்டனம்
திங்கள் 17, மே 2021 9:10:16 PM (IST)
"கரோனா நிவாரண மக்கள் சேவைப் பணிகளில் ஈட்டுபடாமல், சத்குரு ஜக்கி வாசுதேவ் மீது அமைச்சர் பழனிவேல் ராஜன் அவதூறு பரப்புவது தவறு" என இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை தேர்தல் முடிந்து புதிய அரசாக திமுக பதவியேற்றுக் கொண்ட தருணம் நாட்டில் கொரானா இரண்டாம் அலை மக்களை சுனாமியாக தாக்கி அழித்துக் கொண்டிருக்கும் கொடுமையான காலகட்டம். இக் காலகட்டத்தில் அரசு எந்திரத்தில் இருக்கக்கூடிய முதலமைச்சர் முதல் கடைக்கோடி கடைநிலை ஊழியர் வரை மக்களைக் காப்பாற்றுகின்ற வேலையில் முனைப்பு காட்ட வேண்டிய சூழ்நிலை உள்ளது.
ஆனால் திமுகவில் புதிதாக அமைச்சர் பொறுப்பேற்றுள்ள நிதி அமைச்சராக பொறுப்பேற்றுள்ள P.T.R. பழனிவேல் ராஜன் அதிகார பித்தம் தலைக்கேறி வாய்க்கு வந்ததையெல்லாம் உளறிக்கொட்டி, தான் வகித்து வரும் பதவிக்கு இழுக்கு ஏற்படுத்தி வருகின்றார். ஒரு அமைச்சர் பதவி என்பது அனைத்து மக்களுக்குமானது. அந்த அமைச்சர் பதவியில் இருக்கக்கூடிய ஒரு நபர் வெளியிடுகின்ற ஒவ்வொரு வார்த்தையும் கண்ணியமாகவும், அடுத்தவர்களை புண்படுத்தாத வகையிலும், மதிக்கத்தக்க வகையிலும் இருக்க வேண்டும். ஆனால் புதிதாக பதவியேற்றுள்ள தமிழகத்தின் நிதியமைச்சர் வாய்க்கு வந்ததை எல்லாம் உளறிக் கொண்டிருக்கிறார்.
கோடிக்கணக்கான மக்கள் தங்களது குருவாக ஏற்றுக் கொண்டிருக்கக் கூடிய சத்குரு ஜக்கிவாசுதேவ் அவர்களை அவன் / இவன் என்று ஏக வசனத்தில் அவமரியாதையாக பேசிய காணொளிக் காட்சியை சில மாதங்கள் முன்பு மக்கள் அனைவரும் ஏற்கனவே கண்டுள்ளனர். தற்போது மீண்டும் அவர் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்துவதும், இழிப்பதும் - பழிப்பதுமே அவர் மேற்கொள்ளும் தலையாய வேலையாக இன்றைக்கு இருக்கிறது. நாட்டு மக்கள் குறிப்பாக, தமிழக மக்கள் துன்பப்பட்டு கொண்டிருக்கின்ற வேளையில் அவர்களுடைய வாழ்வாதாரத்திற்கு என்ன செய்யலாம், மூடப்பட்டு கிடக்கின்ற தொழில் நிறுவனங்களுக்கு என்ன நிவாரணம் தரலாம் என்றெல்லாம் யோசிக்காமல், ஈஷா மையத்தையும் , சத்குரு ஜக்கி வாசுதேவ் மீதும் குற்றம் சாடுவதும், கைது செய்வோம் என்று கூறுவதும் ஒரு காழ்புணர்வோடு இருப்பதையே காட்டுகிறது.
ஏற்கனவே பல்வேறு தரப்பில் ஜக்கி வாசுதேவ் மீது அபாண்டமாக குற்றம் சாட்டப்பட்ட பொழுது அவர் தன்னுடைய பதிலாக ஒரே ஒரு விஷயத்தைதான் கூறியிருக்கின்றார். என் மீது தவறு இருக்கின்றது என்று ஆதாரம் இருந்தால் அல்லது ஈஷா யோகா மையத்தின் மீது தவறு இருக்கின்றது என்று ஆதாரம் இருந்தால் தாராளமாக நடவடிக்கை எடுங்கள், நாங்கள் அதை தடுக்கவில்லை . நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று கேட்கவில்லை, என்று தெளிவுபடுத்தி இருக்கிறார்.
இவ்வாறிருக்க அமைச்சர் P.T.R. பழனிவேல் ராஜன் தேவையற்ற வார்த்தைகளை பேசி சத்குரு ஜக்கிவாசுதேவ் அவர்களை குருவாக ஏற்றுக் கொண்டிருக்க கூடிய பக்தர்கள் மனதில் வேதனையை ஏற்படுத்தி வருகின்றார். இந்து அறநிலையத்துறை அமைக்கப்பட்ட பின்பு கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழகத்தில் உள்ள கோயில்களில் நூற்றுக்கணக்கான சுவாமி விக்ரகங்கள் காணாமல் போயுள்ளன. ஆயிரக்கணக்கான ஏக்கர்கள் நிலங்கள் காணவில்லை. நூற்றுக்கணக்கான கோயில்கள் சிதிலமடைந்து ஒரு கால பூஜை கூட வழியில்லாமல் உள்ளது.
கடந்த 40 ஆண்டுகளாக இந்து முன்னணி பேரியக்கம் ஆலயங்களை அரசின் பிடியிலிருந்து விடுவித்து தனி வாரியம் அமைத்து ஆன்றோர்கள், மடாதிபதிகள், ஓய்வுபெற்ற ராணுவத்தினரிடம் ஒப்படைத்து பாதுகாக்க வேண்டும் என்று போராடி வருகின்றது. அந்தக் கோரிக்கைக்கு இன்று பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த அடிப்படையில் சமீபகாலமாக ஈஷா யோகா மையத்தின் சத்குரு ஜாக்கி வாசுதேவ் கோயிலை விடுவிக்க வேண்டுமென்று (கோயில் அடிமை நிறுத்து) கோரிக்கை வைத்து வருகின்றார். இது மக்களிடம் பெரிய வரவேற்பு பெற்று வருகின்றது.
இது பொறுக்காததால் தான் நிதி அமைச்சர் தன் வாய்க்கு வந்ததைச் சொல்லி ஒரு இந்து தொண்டு நிறுவனத்தை இழிவு படுத்துகிறார் என்ற சந்தேகம் எழுகிறது. தமிழக நிதியமைச்சர் P.T.R. பழனிவேல் ராஜன் அவர்களுக்கு இந்து முன்னணி சார்பில் கடும் கண்டனங்களையும், மேலும் தொடர்ந்து இதுபோன்று இந்து மத சான்றோர்கள் மீது அவதூறு பேசினால் தனிப்பட்ட முறையிலே அவரை எதிர்த்து கடுமையான போராட்டங்களை இந்து முன்னணி இயக்கம் நடத்த வேண்டியிருக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் நோய் தோற்று கடுமையாக பரவி வருகிறது மக்கள் நூற்றுக்கணக்கில் மடிந்து வருகின்றார்கள். தினசரி நோய் பரவும் வேகம் இன்னும் குறையவில்லை . ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதால் தொழில்கள் வியாபாரம் பாதிக்கப்பட்டு மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து கொண்டிருக்கின்றார்கள். அரசு அதிகாரிகளும் சமூக ஆர்வலர்களும் முன்கள பணியாளர்களும் கடுமையாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆகையால் P.T.R. பழனிவேல் ராஜன் , தனது துறையான நிதி அமைச்சகத்தில் இருந்து மக்களுக்கு வரிவிலக்கு அளிப்பது, மக்களின் துன்பம் துடைப்பது என்ற பணிகளை கவனிப்பது அவசியம் என்பதையும் : தேவையில்லாமல் இந்து ஆன்மீகப் பெரியவர்களை இழிவுபடுத்துவது அவசியமற்றது என்பதையும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவருக்கு உணர்த்தி அவர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி சார்பில் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆமாமே 19, 2021 - 08:42:09 AM | Posted IP 162.1*****