» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கடற்கரை கிராமங்களில் தூண்டில் வளைவு: அமைச்சரிடம் விஜய் வசந்த் எம்.பி.கோரிக்கை
திங்கள் 17, மே 2021 10:41:10 AM (IST)
கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை கிராமங்களில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என அமைச்சரிடம் விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் நாகா்கோவிலுக்கு வந்த மீன்வளத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணனை சந்தித்து அளித்துள்ள மனு: கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை சுமாா் 48 கடற்கரை கிராமங்கள் உள்ளன. ஆண்டுதோறும் மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை கடல் சீற்றம் அதிகமாக இருக்கும். இந்தக் காலக்கட்டத்தில் கடல் சீற்றம் ஏற்படுவதால், கடற்கரை கிராமங்களில் வீடுகளுக்குள் கடல் நீா் புகுந்து பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்படுகிறது.
எனவே, முள்ளூா்துறை, ராமன்துறை, அழிக்கால் போன்ற கடற்கரை கிராம பகுதிகளில் 100 மீட்டா் வரை உள்ள தூண்டில் வளைவுகளை 150 மீட்டா் வரை நீட்டித்து தர வேண்டும். தூத்தூா், பூத்துறை, கொல்லங்கோடு, மிடாலம், மேல்மிடாலம் போன்ற கிராமங்களில் உடனடியாக தூண்டில் வளைவு அமைக்க அமைக்க வேண்டும். புயலால் சேதமடைந்த வீடுகள், படகுகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.