» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஏர் இந்தியா விமானம் ரஷ்யாவில் தரையிறக்கம் : அமெரிக்கா கருத்து
புதன் 7, ஜூன் 2023 12:08:22 PM (IST)
சான் பிரான்சிஸ்கோ செல்லும் ஏர் இந்தியா விமானம் ரஷியாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டதை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
டெல்லியில் இருந்து 216 பயணிகள், 16 விமான பணியாளர்களுடன் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு நேற்று ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. விமானம் வானில் பறந்து கொண்டிருந்துபோது என்ஜினில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்டறிந்த விமானி, விமானத்தை ரஷியாவில் உள்ள மகதான் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டதாக டாடா குழுமத்துக்குச் சொந்தமான தனியார் கேரியர் தெரிவித்துள்ளது.
மகாதன் விமான நிலையத்தில் அவசரமாக விமானத்தை தரையிறக்க அனுமதி கிடைத்ததையடுத்து, 216 பயணிகள் மற்றும் 16 பணியாளர்களுடன் விமானம் தரையிறக்கப்பட்டு பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். பயணிகளுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்படும் என ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், அமெரிக்கா நோக்கி வந்த விமான ரஷியாவின் மகாதன் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டதைத் தொடர்ந்து நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் செய்தித் தொடர்பாளர் வேதாந்த் பட்டேல் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அமெரிக்கா வந்த விமானம் ரஷியாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டதை அறிவோம். நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். அந்த விமானத்தில் எத்தனை அமெரிக்க குடிமக்கள் இருந்தனர் என்பதை இப்போது உறுதிப்படுத்த முடியவில்லை. பயணிகள் தங்கள் பாதையில் செல்வதற்கு வேண்டிய ஒரு மாற்று விமானத்தை அனுப்ப உள்ளனர். இது குறித்த மேலும் எதுவும் பேச நான் விரும்பவில்லை என்று கூறினார்.