» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

காவிரி நீரை தமிழகத்துக்கு வழங்க எதிர்ப்பு : பெங்களூருவில் நாளை முழு அடைப்பு

திங்கள் 25, செப்டம்பர் 2023 4:52:57 PM (IST)

காவிரி நீரை தமிழகத்துக்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் பெங்களூருவில் நாளை முழு அடைப்புப் போராட்டத்துக்கு கன்னட ஆதரவு அமைப்புகளும், விவசாய சங்கங்களும் அழைப்பு விடுத்துள்ளன. 

காவிரி நீரை தமிழகத்துக்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் பெங்களூருவில் நாளை முழு அடைப்புப் போராட்டத்துக்கு கன்னட ஆதரவு அமைப்புகளும், விவசாய சங்கங்களும் அழைப்பு விடுத்துள்ளன. இந்த முழு அடைப்புப் போராட்டத்துக்கு எதிர்க்கட்சிகளான பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியவை ஏற்கனவே ஆதரவு தெரிவித்துள்ளன. கர்நாடக அரசு பேருந்து போக்குவரத்துக் கழக பணியாளர்கள் கூட்டமைப்பு, கர்நாடக கரும்பு விவசாயிகள் சங்கம் உள்பட மொத்தம் 175 அமைப்புகள் இந்த முழு அடைப்புப் போராட்டத்துக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளன.

இந்த முழு அடைப்புப் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள கர்நாடக முதல்வர் சித்தராமையா, "ஜனநாயகத்தில் போராட்டங்கள் நடத்துவதற்கு இடம் உள்ளது. எனவே, போராட்டங்களுக்கு எதிராக நாங்கள் எதையும் செய்ய மாட்டோம். காவிரி விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நாளை வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. எங்கள் வழக்கறிஞர்கள் வலிமையான வாதத்தை முன்வைப்பார்கள். அதேநேரத்தில், இந்த விவகாரத்தில் பாஜகவும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் அரசியல் செய்கின்றன" என தெரிவித்துள்ளார்.

"கர்நாடகாவில் போதிய தண்ணீர் இல்லாத நிலையில் தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை வழங்குவது மிகவும் கடினம். அனால், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை நாங்கள் பின்பற்ற வேண்டிய நிலையில் உள்ளோம். இந்த விவகாரத்தில் கர்நாடகாவின் நலனை நாங்கள் பாதுகாப்போம். அது எங்கள் கடமை" என்று துணை முதல்வர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.

இதனிடையே கர்நாடக அணைகளின் நீர் இருப்பு குறித்து ஆய்வு செய்ய ஒரு குழுவை அனுப்ப வேண்டும் என்று மத்திய அரசை முன்னாள் பிரதமர் தேவகவுடா வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கர்நாடகாவில் தற்போதுள்ள நீர் இருப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு ஒரு குழுவை அனுப்ப வேண்டும். நான் தற்போது உயிரோடு இருப்பது, அரசியல் செய்வதற்காகவோ, அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகவோ அல்ல. மாநில மக்களை பாதுகாக்கவே நாங்கள் இங்கே இருக்கிறோம். அதற்காகவே எனது கட்சி உள்ளது" என உணர்ச்சிபொங்க தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory