» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ரூ.10 கோடி கேட்டு மத்திய அமைச்சர் கட்கரிக்கு கொலை மிரட்டல்: போலீசார் விசாரணை!
புதன் 22, மார்ச் 2023 4:38:54 PM (IST)
ரூ.10 கோடி கேட்டு மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு வந்த கொலை மிரட்டல் அழைப்புகள் குறித்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பா.ஜ., மூத்தத் தலைவரும், மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சருமான நிதின் கட்கரி, மஹாராஷ்டிர மாநிலம் நாக்பூர் தொகுதி எம்.பி.,யாக உள்ளார். இங்கு, அமைச்சர் நிதின் கட்கரிக்கு சொந்தமாக அலுவலகம் உள்ளது. இந்நிலையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அலுவலகத்திற்கு நேற்று (மார்ச்.21) தொலைபேசி வாயிலாக மூன்று முறை கொலை மிரட்டல் அழைப்புகள் வந்தன. இது குறித்து நிதின் கட்கரியின் அலுவலக ஊழியர்கள் போலீசில் புகார் அளித்தனர்.
இதையடுத்து, அமைச்சர் நிதின் கட்கரி வீடு மற்றும் அலுவலகங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. போலீசார் கூறியதாவது:மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் அலுவலகத்திற்கு காலை இரு முறை, மதியம் ஒருமுறை என, மூன்று கொலை மிரட்டல் அழைப்புகள் வந்தன. தொலைபேசியில் பேசிய ஜெயேஷ் புஜாரி என்பவர், 10 கோடி ரூபாய் தரவில்லை எனில் நிதின் கட்கரியை கொலை செய்து விடுவதாக மிரட்டினார்.இதே நபர், கடந்த ஜனவரி மாதமும், 100 கோடி ரூபாய் கேட்டு மிரட்டினார். இது குறித்து தீவிர விசாரணை நடக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.