» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
லாலுவிற்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நிறைவு: தேஜஸ்வி யாதவ் தகவல்
திங்கள் 5, டிசம்பர் 2022 4:34:16 PM (IST)
ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத்துக்கு சிங்கப்பூரில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்ததாக அவரது மகனும் பிகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
பிகார் முன்னாள் முதல்வர், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத்துக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. அவரது மகள் ரோஷ்னி ஆச்சார்யா தனது தந்தைக்கு சிறுநீரகத்தைத் தானம் கொடுக்க முன்வந்த நிலையில், அவருக்கு இன்று வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தனது தந்தையும், மூத்த சகோதரியும் தற்போது நலமாக இருப்பதாக தேஜஸ்வி தெரிவித்துள்ளார்.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு லாலு ஐசியுக்கு மாற்றப்பட்டுள்ளார். எனது தந்தைக்காகப் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி மற்றும் நல்வாழ்த்துகள். மருத்துவமனையில் தனது தந்தையை அழைத்துவரும் விடியோவையும் அவர் சுட்டுரையில் பகிர்ந்துள்ளார். கால்நடைத் தீவன ஊழல் வழக்குகளில் தண்டனை அனுபவித்து வரும் பிகார் முன்னாள் முதல்வர் பிரசாத், உடல் நலக் காரணங்களுக்காக நீதிமன்றத்தால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.