» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல்: பிரதமர் நரேந்திர மோடி வாக்களித்தார்
திங்கள் 5, டிசம்பர் 2022 10:21:44 AM (IST)
குஜராத் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, அகமதாபாத்தில் உள்ள வாக்குச்சாடியில் பிரதமர் நரேந்திர மோடி வாக்களித்தார்.
முன்னதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இன்று குஜராத் இரண்டாம் கட்ட தேர்தலில் மக்கள் குறிப்பாக இளைஞர்களும், பெண்களும் திரளாக வந்து வாக்களிக்க வேண்டுகிறேன். நான் காலை 9 மணிக்கு நான் வாக்களிக்கிறேன்" என்று பதிவிட்டிருந்தார். அதன்படி இன்று காலை 9.25 மணியளவில் அவர் தனது வாக்கினை பதிவை செய்தார். பின்னர் அவர் அங்கிருந்து சிறிது தூரம் மக்களுக்கு கையசைத்தபடி நடந்து சென்றார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி, "ஜனநாயகத் திருவிழாவை குஜராத, இமாச்சலப் பிரதேசம் மற்றும் டெல்லி மக்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர். அவர்களுக்கு நான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தல் ஆணையம் தேர்தலை அமைதியாக நடத்தி வருகிறது. அதற்கும் வாழ்த்துகள்" என்றார். பிரதமர் வருகையை ஒட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
குஜராத்தில் இன்று அகமதாபாத், காந்திநகர், மேஷானா, பதான், பானாஸ்கந்தா, சபர்கந்தா, ஆரவல்லி, மஹீஸ்நகர், பஞ்சமஹால், தாஹோத், ஆனந்த், கேதா, சோட்டா உதய்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கியது. இன்றைய தேர்தலில் 833 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். 2.51 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். 26,409 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.