» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
கோத்ரா ரெயில் எரிப்பு வழக்கில் மேலும் ஒருவருக்கு ஆயுள் தண்டனை: குஜராத் நீதிமன்றம் தீர்ப்பு
திங்கள் 4, ஜூலை 2022 10:28:50 AM (IST)
கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டருக்கு ஆயுள் தண்டனை விதித்து குஜராத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி 27-ந் தேதி, அயோத்தியில் இருந்து கரசேவகர்கள் பயணம் செய்த ரயில், குஜராத் மாநிலம் கோத்ரா ரயில் நிலையத்துக்கு வந்தது. அங்கு ஒரு கும்பல், சில பெட்டிகளுக்கு தீவைத்தது. இதில் 59 கரசேவகர்கள் தீயில் கருகி பலியானார்கள். குஜராத்தில் கலவரம் வெடிக்க இச்சம்பவமே காரணமாக அமைந்தது. இந்த வழக்கில் ஏற்கனவே 34 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், மேலும் ஒருவருக்கு கோத்ரா கூடுதல் செசன்ஸ் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. ரயில் எரிப்பில் குற்றம் சாட்டப்பட்ட ரபீக் பாதுக் என்பவர், தலைமறைவாக இருந்தார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு அவர் மீது வழக்கு விசாரணை நடந்தது. அதில் தற்போது தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.