» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
காற்று மாசுபாட்டை தடுக்க 150 மின்சார பேருந்துகள்: கேஜரிவால் தொடங்கி வைத்தார்!
செவ்வாய் 24, மே 2022 5:32:36 PM (IST)
தில்லியில் காற்று மாசு பரவலைத் தடுக்கும் வகையில் 150 மின்சார பேருந்துகளை முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தில்லியில் நிலவும் கடுமையான காற்று மாசுபாட்டைக் குறைக்கும் வகையில் தில்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதில் ஒன்றாக இன்று மின்சார பேருந்துகளை தொடங்கி வைத்துள்ளது. தில்லியில் இன்று 150 மின்சார பேருந்துகள் தொடங்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் மேலும் 150 மின்சார பேருந்துகள் புதிதாக இயக்கப்படும்.
அடுத்த 10 ஆண்டுகளில் மின்சார பேருந்துகளை வாங்குவதற்காக ரூ.1,862 கோடியை தில்லி அரசு ஒதுக்கியுள்ளது. அடுத்த ஓராண்டுக்குள் 2 ஆயிரம் மின்சாரப் பேருந்துகளை இயக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்திரபிரஸ்தா பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகளை கொடியசைத்து துவக்கிவைத்த முதல்வர், அதில் ஒரு பேருந்தில் ஏறி ராஜ்காட் பேருந்து நிலையம் வரை சென்றடைந்தார்.
அவருடன் தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சர் கைலாஷ் கெஹ்லோட் மற்றும் தலைமைச் செயலாளர் ரரேஷ் குமார் ஆகியோர் உடன் சென்றனர். இந்த பேருந்துகளில் அடுத்த மூன்று நாள்களுக்கு பொதுமக்கள் இலவசமாகப் பயணம் மேற்கொள்ளலாம் என தில்லி அரசு அறிவித்துள்ளது. மேலும் தில்லி போக்குவரத்து துறைக்கு சொந்தமான பேருந்து நிலையங்களில் மின்சார வாகனங்களின் பேட்டரிகளை சார்ஜ் செய்யும் மையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. "தில்லி இன்று மாசுபாட்டிற்கு எதிரான போராட்டத்தில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளது" என்று இந்தியில் தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் பகிர்ந்தார்.