» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ராகுல் காந்தி தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் : மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வேண்டுகோள்
திங்கள் 21, ஜூன் 2021 5:42:42 PM (IST)
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மத்திய அரசின் தடுப்பூசி கொள்கை மற்றும் கரோனாவை கையாளும் விதம் குறித்து ராகுல் காந்தி நாள்தோறும் விமரிசித்து வருகிறார். இந்த நிலையில் பிகார் மாநிலம் பாட்னாவில் செய்தியாளர்களைச் சந்தித்த ரவிசங்கர் பிரசாத் "ராகுல் காந்தி தடுப்பூசி செலுத்திக்கொண்டாரா, இல்லையா என்பது நாட்டு மக்களுக்குத் தெரியாது. ஒருவேளை இன்னும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை என்றால் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்." என்றார்.
காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி இரண்டு தவணை தடுப்பூசியையும் செலுத்திக்கொண்டதாக கடந்த வாரம் தகவல்கள் வெளியாகின. ராகுல் காந்திக்கு மே மாதம் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதால் இன்னும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.